பத்ம விருதுகளுக்கான பரிந்துரை 28 மடங்கு அதிகரிப்பு: பிரதமர் மோடி
பத்ம விருதுகளுக்கான பரிந்துரை 2014-ஐ விட தற்போது 28 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
2024-ன் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். இந்த உரையில் பத்ம விருதுகள் மீதான நம்பகத்தன்மை மற்றும் மரியாதை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
"கடந்த 10 ஆண்டுகளில் பத்ம விருதுகளுக்கான நடைமுறை முற்றிலுமாக மாறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது மக்களின் பத்ம விருதுகளாக உள்ளது. பத்ம விருதுகளை அறிவிப்பதற்கான அமைப்பு முறையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்களே பத்ம விருதுகளைப் பரிந்துரை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், பத்ம விருதுகளுக்கான பரிந்துரை 2014-ஐ காட்டிலும் 28 முறை அதிகரித்துள்ளது. பெருமைமிகு பத்ம விருதுகள் மீதான நம்பகத்தன்மை மற்றும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இது வெளிப்படுத்துகிறது. பத்ம விருதுகளை வென்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
1954 முதல் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. குடியரசு நாளுக்கு முந்தைய நாள் இரவு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அண்மையில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.