கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கேரள ஆளுர் ஆரிஃப் முகமது கான், தன்னை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கும்வரை அங்கிருந்து செல்லப்போவதில்லை என்று தர்னாவில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஆளுநருக்கும் கேரள அரசுக்கும் இடையேயோன மோதல் நீண்டகாலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாநில நலனுக்கு எதிராக செயல்படுவதாக ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்து ஆளுங்கட்சியினரும் அதன் அமைப்புகளும் அவ்வப்போது போராட்டம் நடத்துவதுண்டு.
இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள நிலம்மல் பகுதியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்எஃப்ஐ அமைப்பினர் போராட்டத்தை அறிவித்திருந்தார்கள். ஆளுநர் காரில் வந்து இறங்கியதும் கருப்புக்கொடியை உயர்த்தி போராட்டத்தில் இறங்கினார்கள்.
கருப்புக்கொடியை கண்டு அதிர்ச்சியடைந்த ஆளுநர், ஆர்ப்பாட்டத்தில் இறங்கியவர்கள் மீது காவல் துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவல்துறையினர் தயங்கவே, சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். ஆளுநரைச் சமாதானப்படுத்திய காவல் துறையினர், எஸ்எஃப்ஐ அமைப்பினர் மீது வழக்குத் தொடர்வதாக உறுதியளித்த பின்னரே ஆளுநர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ஆளுநரின் திடீர் தர்னா, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள, தமிழக ஆளுநர்களின் செயல்பாடுகளும் பேச்சுகளும் அரசியல் கட்சிகள் மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் ஆளுநர் சர்ச்சைகளின் மையமாக இருப்பதாகவும் சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக துணை வேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு அவரே காரணமாக இருக்கிறார் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.