மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மமதா பானர்ஜி கூறியதாவது:
"காங்கிரஸ் கட்சியுடன் நான் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் என்பது நான் தொடர்ந்து கூறி வருவதுதான். நாடு முழுவதிலும் என்ன நடக்கும் என்பது குறித்து கவலையில்லை. நாங்கள் மதச்சார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டு பாஜகவை வீழ்த்துவோம். நான் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறேன். ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம் எங்களது மாநிலத்தைக் கடக்கிறது. ஆனால், அதுகுறித்து எங்களிடம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை."
மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் திரிணமூல் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி வந்துகொண்டிருந்தன. இந்த நிலையில் திரிணமூல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது இண்டியா கூட்டணியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.