பஞ்சாபிலுள்ள அனைத்து 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இண்டியா கூட்டணியை அமைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்தக் கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி இன்று (புதன்கிழமை) அறிவித்தார். எனினும், இண்டியா கூட்டணியில் தாங்கள் நீடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பஞ்சாபிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை என்று பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
மேற்கு மமதா பானர்ஜி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது குறித்து பகவாந்த் மானிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்து அவர் கூறுகையில், "பஞ்சாபில் காங்கிரஸுடன் எந்தக் கூட்டணியும் இல்லை. அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை" என்றார்.