தில்லியிலுள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தமிழில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். ஏற்கெனவே, எல். முருகன் இல்லத்தில் கடந்தாண்டு நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழாவிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
பொங்கல் விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். விழாவுக்கு வேஷ்டி அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி பொங்கல் வைத்து, அங்கிருந்த மாட்டுக்கு மரியாதை செலுத்தினார்.
இதன்பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி முதலில் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என அனைவருக்கும் தமிழில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.”
என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டி அவர் உரையாற்றினார்.