காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மணிப்பூரின் தௌபாலிலிருந்து இரண்டாம் கட்ட ஒற்றுமைக்கான நடைபயணத்தைத் தொடங்கினார்.
ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணத்தில் 67 நாள்களில் 110 மாவட்டங்கள் வழியாக 6,700 கி.மீ. தூரத்தைக் கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒற்றுமைக்கான நடைபயணமானது மார்ச் 20-ல் மும்பையில் நிறைவடையவுள்ளது.
இந்தப் பயணத்துக்காக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒரே விமானத்தில் தில்லியிலிருந்து மணிப்பூரின் இம்பால் வந்தார்கள். இம்பாலில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பை அளித்தார்கள்.
மணிப்பூரின் தௌபாலில் அமைந்துள்ள காங்ஜோம் போர் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து ஒற்றுமைக்கான நடைபயணம் தொடங்கும் பொதுக்கூட்டத்துக்குச் சென்றார். அங்கு மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உரையாற்றினார்கள்.
ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஒற்றுமைக்கான நடைபயணத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தார்கள்.