ஐபிஎல் 2024: இந்த வருடத்துடன் ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?
இந்திய விக்கெட் கீப்பர் - பேட்டர் தினேஷ் கார்த்திக், தனது கடைசி ஐபிஎல் போட்டியை இந்த வருடம் விளையாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த முடிவையும் விரைவில் அவர் எடுக்கவுள்ளார்.
ஜூன் மாதம் 39 வயதை எட்டும் தினேஷ் கார்த்திக், 2008-ல் தில்லி டேர்டெவில்ஸ் (இப்போது தில்லி கேபிடல்ஸ்) அணியுடன் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கினார். தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன், சாஹா, மணிஷ் பாண்டே ஆகியோருடன் ஐபிஎல் போட்டியின் ஒவ்வொரு பருவத்திலும் இடம்பெற்ற ஏழு வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். கடந்த 16 பருவங்களில் இரு ஆட்டங்களை மட்டுமே அவர் தவறவிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஆர்சிபி அணியில் விளையாடி 13 ஆட்டங்களில் 140 ரன்களை மட்டுமே எடுத்தார். 240 ஐபிஎல் ஆட்டங்களில் 20 அரை சதங்களுடன் 4516 ரன்கள் எடுத்துள்ளார். கொல்கத்தா, தில்லி ஐபிஎல் அணிகளின் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். 2021 முதல் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் உள்ளார்.