கோவையில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் 2-வது நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் முதல் இன்னிங்ஸில் 117 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
முதல் நாளில் செளராஷ்டிர அணி, 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளையும் அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. இன்று தமிழக அணி மிகவும் தெம்பாக விளையாடியது. நைட் வாட்ச்மேனாக விளையாடிய கேப்டன் சாய் கிஷோர் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து அருமையான காலை வேளையைத் தமிழகத்துக்கு ஏற்படுத்தினார். தமிழக அணியின் பேட்டிங்கின் மையமாக இருக்கும் பாபா இந்திரஜித் இன்றும் சிறப்பாக விளையாடி 80 ரன்கள் எடுத்தார். 21 வயது பூபதி குமார், நிதானமாக விளையாடி 65 ரன்கள் எடுத்து தன் பங்குக்கு உதவினார்.
2-வது நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் சங்கர் 14, முஹமது அலி 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். முதல் இன்னிங்ஸில் 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தமிழக அணி, அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான நிலையில் உள்ளது.