இந்தியா 445 ரன்கள்: டக்கெட் அதிரடிச் சதம், இங்கிலாந்து 207/2

பென் டக்கெட் 88 பந்துகளில் சதமடித்தார். இந்திய மண்ணில் வேகமாகச் சதமடித்த இங்கிலாந்து பேட்டர் என்கிற சாதனையையும் அவர் படைத்தார்.
இந்தியா 445 ரன்கள்: டக்கெட் அதிரடிச் சதம், இங்கிலாந்து 207/2
ANI

ராஜ்கோட் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்துள்ளது. மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 2-வது நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.

இரு டெஸ்டுகளின் முடிவில் 1-1 என இந்தியா, இங்கிலாந்து அணிகள் சமனில் உள்ள நிலையில் 3-வது டெஸ்ட், ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில், இந்திய அணி 86 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது.

இன்று ஆட்டம் தொடங்கிய பிறகு, குல்தீப் யாதவ் 4 ரன்களுக்கும் ஜடேஜா 112 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு அஸ்வினும் அறிமுக வீரர் துருவ் ஜுரெலும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். துருவ் ஜுரெல் 3 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இருவரும் 175 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஜுரெல் 46 ரன்களுக்கும் அஸ்வின் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இருவரும் இந்திய அணியின் ஸ்கோர், 400 ரன்களைத் தாண்ட முக்கியக் காரணமாக அமைந்தார்கள். இதன்பிறகு பும்ரா அபாரமாக விளையாடி, 1 சிக்ஸரும் 3 பவுண்டரிகளும் அடித்து 26 ரன்களுடன் கடைசில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, 130.5 ஓவர்களில் 445 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வுட் 4 விக்கெட்டுகளும் ரெஹான் அஹமது 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இங்கிலாந்து அணி வழக்கம்போல பேஸ்பால் உத்தியைத் தொடர்ந்தது. இதனால் டி20 கிரிக்கெட் ஆட்டம் பார்ப்பது போல இருந்தது. பென் டக்கெட் தொடர்ந்து பவுண்டரிகளை அடித்துக்கொண்டிருந்தார். ஸாக் கிராலி, 15 ரன்களில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்து, அவருக்கு 500-வது டெஸ்ட் விக்கெட்டை வழங்கினார். இந்த இலக்கை அடையும் 2-வது இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். அடுத்து வந்த ஆலி போப்பும் அதிரடியாக விளையாடியதால், இந்திய அணி நெருக்கடியை எதிர்கொண்டது. பும்ரா உள்பட எல்லா இந்தியப் பந்துவீச்சாளர்களும் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் கொடுத்தார்கள். ஜடேஜா, குல்தீப் யாதவ் பந்துகளை எளிதாக எதிர்கொண்டார்கள். இந்தச் சூழலில் அருமையான பந்தில் போப்பை 39 ரன்களுக்கு வீழ்த்தினார் சிராஜ். பென் டக்கெட் அதிரடி ஆட்டத்தால் 88 பந்துகளில் சதமடித்தார். இந்திய மண்ணில் வேகமாகச் சதமடித்த இங்கிலாந்து பேட்டர் என்கிற சாதனையையும் அவர் படைத்தார்.

இங்கிலாந்து அணி, 2-வது நாள் முடிவில் 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. ரன்ரேட் - 5.91. பென் டக்கெட் 118 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் 133 ரன்களும் ஜோ ரூட் 9 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள். கைவசம் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 238 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதேபோல இங்கிலாந்து அணி நாளையும் விளையாடினால், இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி உருவாகும் என்பதால் 3-வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in