இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 500-வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்த இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், தீடீரென இந்த டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட அவசரச் சூழல் காரணமாக ராஜ்கோட் டெஸ்டிலிருந்து அஸ்வின் விலகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. இந்தச் சவாலான சூழலில் அஸ்வினுக்கு பிசிசிஐ முழு ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வினின் தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்திய அணி 10 வீரர்களைக் கொண்டு ராஜ்கோட் டெஸ்டில் விளையாடவுள்ளது. அஸ்வினுக்குப் பதிலாக மாற்று வீரர் அணியில் சேர்க்கப்பட்டாலும் அவரால் பேட்டிங், பந்துவீச்சில் ஈடுபடமுடியாது. ஃபீல்டிங்கில் மட்டுமே அணிக்கு உதவமுடியும். பேட்டிங்கின்போது தலைக்கவசத்தில் பந்து பட்டு மயக்கம் ஏற்பட்டாலோ அல்லது கொரோனா காரணமாகவோ மட்டும்தான் மாற்று வீரரை அணியில் சேர்க்க முடியும். ஆனால் காயம் மற்றும் சொந்தக் காரணங்களுக்காக ஆட்டத்திலிருந்து விலகினால் மாற்று வீரரால் பேட்டிங், பந்துவீச்சில் ஈடுபட முடியாது.