ராஜ்கோட் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்துள்ளது. மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரு டெஸ்டுகளின் முடிவில் 1-1 என இந்தியா, இங்கிலாந்து அணிகள் சமனில் உள்ள நிலையில் 3-வது டெஸ்ட், ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில், இந்திய அணி 86 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய பிறகு, குல்தீப் யாதவ் 4 ரன்களுக்கும் ஜடேஜா 112 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு அஸ்வினும் அறிமுக வீரர் துருவ் ஜுரெலும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். துருவ் ஜுரெல் 3 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இருவரும் 175 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஜுரெல் 46 ரன்களுக்கும் அஸ்வின் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இருவரும் இந்திய அணியின் ஸ்கோர், 400 ரன்களைத் தாண்ட முக்கியக் காரணமாக அமைந்தார்கள். இதன்பிறகு பும்ரா அபாரமாக விளையாடி, 1 சிக்ஸரும் 3 பவுண்டரிகளும் அடித்து 26 ரன்களுடன் கடைசில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, 130.5 ஓவர்களில் 445 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வுட் 4 விக்கெட்டுகளும் ரெஹான் அஹமது 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.