இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேலும் இரு டெஸ்டுகளை இந்திய பேட்டர் விராட் கோலி தவறவிடவுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் தனிப்பட காரணங்களுக்காக முதல் இரு டெஸ்டுகளில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். இதனால் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3-வது டெஸ்டில் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேலும் இரு டெஸ்டுகளில் கோலி விளையாட மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 5-வது டெஸ்டில் அவர் விளையாடுவதும் சந்தேகம் எனத் தெரிகிறது. முதல் டெஸ்டில் விளையாடுவதற்காக ஹைதராபாதுக்கு வந்த கோலி, திடீரென அணியிலிருந்து விலகினார். தற்போதைய சூழலில், முழு டெஸ்ட் தொடரையும் அவர் தவறவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.
2-வது டெஸ்டில் விளையாடாத ஜடேஜா, ராகுல் ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு 3-வது டெஸ்டில் விளையாடத் தயாராகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஓய்வு அளிக்கப்பட்ட சிராஜ், இந்திய அணியுடன் மீண்டும் இணையவுள்ளார். மேலும் 3-வது டெஸ்டுக்கு 10 நாள்கள் இடைவெளி இருப்பதால், ராஜ்கோட்டில் பும்ரா விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இரு டெஸ்டுகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.