கடந்த சில நாள்களாகத் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் வந்த அவதூறுக் கருத்துகளுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
X தளத்தில் நிவேதா பெத்துராஜ் கூறியதாவது:
“எனக்காக ஏராளமான பணம் செலவு செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்யும் முன்பு, மனிதநேயத்துடன் தகவலைச் சரிபார்த்துவிட்டுப் பேசுவார்கள் என நினைத்துத் தான் நான் அமைதியாக இருந்தேன்.
இதனால் நானும் என் குடும்பத்தினரும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளோம். நான் மிகவும் கண்ணியமான குடும்பத்திலிருந்து வந்துள்ளேன். 16 வயது முதல் யார் உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் குடும்பத்துடன் கடந்த 20 வருடமாகத் துபாயில் வசிக்கிறேன். நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. நான் நடித்த 20 படங்களும் தானாக வந்த வாய்ப்புகள். பணத்தின் மீது எப்போதும் பேராசை கொள்ளமாட்டேன்.
என்னைப் பற்றி பரவி வரும் தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். 2002 முதல் துபாயில் வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். 2013 முதல் ரேஸிங் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். சென்னையில் நடத்தப்படும் ரேஸ்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் முக்கியமான ஒருவர் அல்ல, நான் சாதாரண வாழ்கையை வாழ்ந்து வருகிறேன். நிறைய போராட்டங்களுக்குப் பிறகு ஒரு நல்ல இடத்திற்கு வந்துள்ளேன். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் போல தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்கையை வாழ விரும்புகிறேன்.
இது தொடர்பாக சட்டப்படி நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் பத்திரிகைத் துறையில் இன்னும் கொஞ்சம் மனிதநேயம் இருக்கிறது என நம்புகிறேன். அதனால் தொடர்ந்து என்னைப் பற்றி தவறாகப் பேச மாட்டார்கள் என நம்புகிறேன்.
ஒரு குடும்பத்தின் பெயரைக் கெடுக்கும் முன்பு அந்தத் தகவலை உறுதி செய்யுமாறு பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.