சென்னையில் சிஎஸ்கே அணியுடன் இணைந்தார் தோனி.
ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் சென்னையில் சிஎஸ்கே அணியுடன் இணைந்தார் தோனி. சென்னை அணியின் வீரர்கள் மார்ச் 2 முதல் பயிற்சியைத் தொடங்கினர்.
கடந்த ஜுன் மாதத்தில் இடது முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி தற்போது அணியுடன் இணைந்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் காயத்தால் அவதிப்பட்ட நிலையில் ஒரு ஆட்டத்தையும் தவறவிடாமல் விளையாடிய அவர், சிஎஸ்கே அணிக்காக 5-வது கோப்பையையும் வென்றார்.
தோனி குறித்து சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “தோனி நலமாக உள்ளார். அவர் உடற்பயிற்சி கூடத்தில் தனது பயிற்சியைத் தொடங்கிவிட்டார்” எனக் கூறினார்.
சிஎஸ்கே அணியில் மற்றொரு விக்கெட் கீப்பராக இருந்த கான்வே இடக்கை கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதனால் மே மாதம் வரை ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தோனி விளையாடாத நிலை ஏற்பட்டால் மற்றொரு விக்கெட் கீப்பராக சமீபத்தில் இந்திய யு-19 அணிக்காக விளையாடிய அவனிஷ் ராவ் விளையாடுவார் எனத் தெரிகிறது.