லாலு பிரசாத் யாதவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சார்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பேரணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், “மோடிக்கு குடும்பமே இல்லை, அதனால் அவர் வாரிசு அரசியலைத் தாக்கி வருகிறார்” என பேசினார்.
இதைத் தொடர்ந்து மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் தங்கள் X தளத்தில் அவர்களின் பெயருடன் “மோடி கா பரிவார் (மோடியின் குடும்பம்) ” எனச் சேர்த்துள்ளனர்.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பாஜகவை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் தங்களது பெயர்களுக்குப் பின்னால் “மோடி கா பரிவார் (மோடியின் குடும்பம்) ” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
இதே போல கடந்த 2019-ல் பிரதமர் மோடி தனது பெயருக்கு முன்பு செளக்கிதார் (தேசத்தின் காவலாளி) எனச் சேர்த்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் செளக்கிதார் (தேசத்தின் காவலாளி) எனச் சேர்த்துக் கொண்டனர்.