தமிழ்நாடு - மும்பை இடையிலான ரஞ்சி அரையிறுதியில் மும்பை அணி 207 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மும்பையில் நடைபெறும் ரஞ்சி கோப்பை அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தமிழ்நாட்டின் மேல்வரிசை பேட்டர்கள் திணறினர்.
முதல் இன்னிங்ஸில் 64.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழ்நாடு அணி. மும்பை அணியில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஷார்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோடியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மோஹித் அவாஸ்தி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதைத் தொடார்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆரம்பம் முதல் அசத்தலாக பந்துவீசிய சாய் கிஷோர் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணிக்கு நெருக்கடி அளித்தார். இதனால் மும்பை அணி 106 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
இதைத் தொடர்ந்து ஹார்திக் தாமோர் மற்றும் ஷார்துல் தாக்குர் சிறப்பான கூட்டணியை அமைத்தனர். 105 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை சாய் கிஷோர் பிரித்தார். ஹார்திக் தாமோர் 35 ரன்கள் எடுத்து வெளியேற கோட்டியன் - ஷார்துல் தாக்குர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய ஷார்துல் தாக்குர் தனது முதல் சதத்தை அடித்தார். 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து ஷார்துல் தாக்குர் ஆட்டமிழந்தார். இதன் பிறகு காலிறுதியில் கலக்கிய கோட்டியன் அரைசதம் அடித்தார். அவருடன் தேஷ்பாண்டே ஜோடி சேர்ந்தார்.
பரோடா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 10, 11-வதாகக் களமிறங்கி கோட்டியன் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் சதம் அடித்து சாதனை படைத்தனர். அதே போல இந்த இன்னிங்ஸிலும் 63 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்து 207 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கோட்டியன் 74, தேஷ்பாண்டே 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.