பெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வெடித்ததில் 9 பேர் காயமடைந்துள்ளார்கள்.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து உணவகத்தின் ஒரு சில பகுதிகள் சேதமடைந்தன.
இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். உணவகத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் 7 பேர் என இந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்த 9 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர் போல வந்த ஒருவர் வைத்துச் சென்ற பையில் இருந்து வெடிகுண்டு வெடித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.