போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாஃபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்

வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனைத்து விமான நிலையங்களுக்கும் கொடுத்துள்ளனர்.
ஜாஃபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்
ஜாஃபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்@arjaffersadiq

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தில்லியில் காவல் துறை சிறப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மூன்று மாதங்களில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளதாகவும், இந்தக் கடத்தல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக் என்பதும் தெரிந்தது.

இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து திமுகவினுடைய சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து ஜாஃபர் சாதிக் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தில்லியில் கைது செய்யப்பட்ட மூவரும், ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள்தான் இந்தக் கடத்தலுக்கு மூளையாக இருந்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதைத் தொடர்ந்து ஜாஃபர் சாதிக் தலைமறைவானார்.

இதன் பிறகு ஜாஃபர் சாதிக் வீட்டில் கடந்த 28 அன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி, அவர் வீட்டிற்கு 'சீல்' வைத்தனர்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாஃபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனைத்து விமான நிலையங்களுக்கும் கொடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in