பணிப் பெண் சித்ரவதை வழக்கில் திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா ஆகியோர் திருவான்மியூரில் வசித்து வருகிறார்கள். இவ்விருவரும் வீட்டு வேலைக்காக உளுந்தூர்பேட்டையிலிருந்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைத் துன்புறுத்தி சித்திரவதை செய்ததாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்தார்.
இந்நிலையில் ஆண்டோ மற்றும் மெர்லினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவானார்கள். இவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதன் பிறகு ஆண்டோ, மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் இருவருக்கும் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.