சர்வதேச கிரிக்கெட் நடுவர் மரை எராஸ்மஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்டுடன் ஓய்வு பெறவுள்ளதாக பிரபல நடுவர் மரை எராஸ்மஸ் அறிவித்துள்ளார். 60 வயதான இவர் 2006 முதல் 80 டெஸ்டுகள், 124 ஒருநாள், 43 டி20 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸை டைம்ட் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் எராஸ்மஸ்.
தனது ஓய்வுக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் நடுவராக செயல்படுவேன் என்று எராஸ்மஸ் தெரிவித்துள்ளார். 2011, 2015, 2019 மற்றும் 2023 உலகக் கோப்பையிலும், 8 டி20 உலகக் கோப்பையிலும், மூன்று மகளிர் டி20 உலகக் கோப்பையிலும், 10 வருடமாக ஐபிஎல் போட்டிகளிலும் எராஸ்மஸ் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
எராஸ்மஸ் 2016, 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஐசிசியின் சிறந்த நடுவருக்கான விருதை வென்றார். 2010 முதல் ஐசிசி நடுவர்களின் எலைட் பேனல் குழுவிலும் இணைந்தார் எராஸ்மஸ்.