பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10, 11-வதாகக் களமிறங்கி கோட்டியன் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் சதம் அடித்து சாதனை படைத்தனர்.
மும்பை - பரோடா இடையிலான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 384 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து பரோடா அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு 2-வது இன்னிங்ஸில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 10, 11-வதாகக் களமிறங்கிய கோட்டியன் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் அருமையான கூட்டணியை அமைத்தனர்.
இருவரும் அதிரடியாக விளையாடி தங்களது முதல் சதத்தை அடித்தனர். இதனால் மும்பை அணி 569 ரன்கள் குவித்தது. தேஷ்பாண்டே 8 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் எடுத்து வெளியேறினார். கோட்டியன் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இக்கூட்டணி 232 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்த ஜோடி 78 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்துள்ளது. முதல் தர ஆட்டத்தில் ஓர் அணியின் கடைசி இரு பேட்டர்கள் சதம் அடிப்பது 78 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு 1946-ல் நடந்த ஒரு முதல் தர ஆட்டத்தில் இந்திய வீரர்களான சர்வட் மற்றும் பானர்ஜி ஆகியோர் கடைசி இரு பேட்டர்களாக களமிறங்கி சதம் அடித்தனர்.