சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர், பெண்ணின் உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஷர்மி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பள்ளிக்கரணை பகுதியில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள். ஷர்மி, பிரவீனை திருமணம் செய்துகொண்டதில் அவரது வீட்டாருக்கு விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஷர்மியின் காதலுக்கு அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள மதுபானக் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்குத் தகவலைத் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், பிரவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷர்மியின் அண்ணன் தினேஷ் உள்பட 5 நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.