‘தில்லி சலோ’ பேரணி: மீண்டும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

காவல் துறையினர் விவசாயிகளை தில்லியை நோக்கி செல்லவிடாமால் ஹரியானா - பஞ்சாப் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர்.
‘தில்லி சலோ’ பேரணி
‘தில்லி சலோ’ பேரணிANI

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யச் சட்டம் இயற்ற வேண்டும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சன்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஆகிய விவசாய சங்கங்கள் தில்லியை நோக்கி பிப். 13 முதல் பேரணியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த பேரணியைத் தடுக்கும் விதமாக கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டு வீசி, விவசாயிகளைக் கலைத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், “விவசாயிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, 5 ஆண்டுகளுக்குப் பருப்பு வகைகள், சோளம் மற்றும் பருத்தி விளைபொருட்கள் அரசாங்க நிறுவனங்களால் குறைந்தபட்ச விலைக்கு வாங்கப்படும். மேலும் கொள்முதல் செய்வதற்கான அளவுகோல் எதுவும் கிடையாது” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். இதைத் தொடர்ந்து ‘தில்லி சலோ’ பேரணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தால் மீண்டும் தங்களது பேரணியை விவசாய சங்கங்கள் தொடங்கின. 5-ம் கட்ட பேச்சுவார்த்தையை விவசாயிகளிடம் நடத்த மத்திய அரசு அழைப்புவிடுத்த நிலையில், இன்று மீண்டும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் விவசாயிகளை தில்லியை நோக்கி செல்லவிடாமால் ஹரியானா - பஞ்சாப் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in