தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:
“தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் படத்தின் வசூல் தொகையில் இருந்து 80 சதவீதத்தை விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால், 60 சதவீதத்தை மட்டுமே எங்களால் செலுத்த முடியும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். கேரளாவில் பல ஆண்டுகளாக எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்குப் படத்தின் வசூல் தொகையில் இருந்து 60 சதவீதத்தை மட்டுமே செலுத்தி வருகின்றனர். இதுபோல தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டும்.
மேலும் திரையரங்குகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் நடத்தவும், விளையாட்டுப் போட்டிகளைத் திரையிடவும் அனுமதி கேட்க உள்ளோம். படம் வெளியாகி உடனடியாக ஓடிடியில் வெளியிடுவதால் சிரமமாக இருக்கிறது. திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிடவேண்டும். மேலும் சிறு படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை. தரமில்லாத படங்களைப் பார்க்க சும்மா கூப்பிட்டாலும் மக்கள் வர மாட்டார்கள்” என்றார்.