உலக அழகிப் போட்டி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறுகிறது. மும்பையில் மார்ச் 9 அன்று நடைபெறும் இப்போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்ற சினி ஷெட்டி இந்தியாவின் சார்பாகப் பங்கேற்கிறார். கர்நாடக மாநிலம் மங்களூருவைப் பூர்வீகமாகக் கொண்ட சினி ஷெட்டி மும்பையில் பிறந்தவர்.
உலக அழகிப் போட்டியில் பங்கேற்பது குறித்து ஏஎன்ஐயிடம் சினி ஷெட்டி கூறியதாவது:
“நான் 140 கோடி மக்களின் பிரதிநிதியாகப் பங்கேற்கிறேன். இது மிகப்பெரிய பொறுப்பு. இந்தியக் கலாசாரம், இங்குள்ள பல்வேறு பாரம்பரியங்கள், ஒவ்வொருவரின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் சார்பாக நான் பங்கேற்கிறேன். நான் என்னை ஒரு தற்செயலான சுற்றுலாப் பயணி எனக் கருதுகிறேன். அனைத்தும் ஒரு காரணத்திற்காக நடக்கிறது என நினைக்கிறேன். கடவுள் கருணை காட்டியுள்ளார். நான் அக்கவுண்டன்சி படித்தேன், எனக்கு மார்க்கெட்டிங் பிரிவில் வேலை கிடைத்தது. இப்போது உலக அழகிப் போட்டியில் பங்கேற்க இங்கு வந்துள்ளேன். இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம். இந்த தளத்தைப் பயன்படுத்தி நான் பெரிய விஷயங்களைச் செய்வேன் என்று நம்புகிறேன்” என்றார்.