ஐபிஎல் 2024 போட்டி, மார்ச் 22 அன்று தொடங்கும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் அறிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அனைத்து ஆட்டங்களும் இந்தியாவில் தான் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் அறிவித்துள்ளார். முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - குஜராத் அணிகள் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2024 குறித்து அருண் துமால் கூறியதாவது: “ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22 அன்று தொடங்கும். அரசு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தேர்தல் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். எனவே ஆரம்பத்தில் முதல் 15 நாள்களுக்கான அட்டவணையை வெளியிடுவோம். தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மீதி ஆட்டங்களுக்கான அட்டவணையை வெளியிடுவோம். அனைத்து ஆட்டங்களும் இந்தியாவில் தான் நடைபெறும்” என்றார்.
மார்ச் 22-ல் தொடங்கும் இப்போட்டியின் இறுதிசுற்று மே 26 அன்று நடைபெறும் என தெரிகிறது. ஜுன் 1 அன்று டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.