தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு மலர் கண்காட்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் பிப். 10 அன்று தொடங்கியது. பிப். 19 வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. நேற்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்குப் பிறகு மலர் கண்காட்சியைப் பார்க்கச் சென்ற பலரைத் திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்ட காரணத்தால் செம்மொழிப் பூங்காவில் பரபரப்பு ஏற்பட்டது.
பூங்காவிற்கு வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தாலும், வாகனங்களை நிறுத்த தாமதமான காரணத்தாலும் ஒரு சிலர் மாலை 6.30 மணிக்குப் பிறகு பூங்காவிற்குச் சென்றுள்ளனர். ஆனால், 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் பூங்காவில் இருந்ததால் மாலை 6.30 மணிக்கு நுழைவை மூடியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதன் பிறகு வந்த யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பலரும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து இரவில் பூங்காவுக்குள் அனுமதிக்கும் நேரத்தை நீட்டிக்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாளையுடன் இந்தக் காண்காட்சி நிறைவு பெறுவதால் அடுத்த வருடம் இந்தக் குறை களையப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.