பராமரிப்புப் பணிகளுக்காக 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவைக்கு உதவும் வகையில் புறநகர் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே பராமரிப்புப் பணிகளுக்காக பிப்.22 வரை 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கி மதியம் 3.15 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மக்களின் சிரமங்களைப் போக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடுதலாக 150 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் ப்ளூ லைன் மற்றும் கிரீன் லைன் இரண்டிலும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும், 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும் என்றும், இரவு 08:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.