3-வது டெஸ்ட்: 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.
இந்திய அணி வெற்றி
இந்திய அணி வெற்றிANI

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சிராஜ், ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றனர். மேலும் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோருக்கும் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் பஷீருக்கு பதிலாக மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஷுப்மன் கில் 65 ரன்களும், குல்தீப் யாதவ் 3 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கில் 2 சிக்ஸர்கள், 9 பவுன்ண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதன் பிறகு ரிடையர்ட் ஹர்ட் ஆன ஜெயிஸ்வால் மீண்டும் களத்திற்கு திரும்பினார். அவருடன் பக்கபலமாக சர்ஃபராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினர். சர்ஃபராஸ் கான் தனது 2-வது அரைசதத்தைப் பதிவு செய்தார். மறுபக்கம் ஜெயிஸ்வால் இரட்டைச் சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி. இதனால் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெயிஸ்வால் 214 ரன்களும், சர்ஃபராஸ் கான் 68 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாட வந்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் முதல் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. இதனால் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணிக்கு டெஸ்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆட்டமாக இது அமைந்துள்ளது. அதிகபட்சமாக மார்க் வுட் 33 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த டெஸ்டில் ஒரு சதம் அடித்து மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வானார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. அடுத்த டெஸ்ட் பிப் 23 அன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in