சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான உதயம் திரையரங்கம் விரைவில் மூடப்படுகிறது.
சென்னை அசோக் பில்லர் அருகே அமைந்துள்ள உதயம் திரையரங்கம் 1983-ல் கட்டப்பட்டது. சென்னையின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமாக இயங்கும் திரையரங்குகளில் ஒன்றாக இருந்த உதயம் திரையரங்கம் விரைவில் மூடப்படுகிறது. சென்னையின் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கமாகவும் இது அமைந்தது. இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய 4 திரைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்ட் மூலம் இங்கே மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று வரப்போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுக்க பல மல்டிபிளக்ஸ் திரையரங்கம் வந்த காரணத்தால் அதிகளவில் இங்கு ரசிகர்கள் வராத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே உதயம் திரையரங்கம் விரைவில் மூடப்படுகிறது. மேலும் உதயம் திரையரங்கம் போல் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 300 திரையரங்குகள் மூடப்படும் நிலையில் உள்ளதாகத் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இது குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 300 திரையரங்குகள் மூடப்படும் நிலையில் உள்ளது. மின்சார கட்டணத்தைக் கூட எங்களால் செலுத்த முடியவில்லை. தமிழ்நாடு முழுக்க 1226 திரைகள் உள்ளன. ஓடிடி தளம் வந்த பிறகு பெரும்பாலான திரையரங்குகளின் வசூல் குறைந்துள்ளது” என்றார்.