பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் மாற்றுத்திறனாளிகள் இன்று (புதன்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதித்துள்ளது.
இது மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர வேலை, ஊக்கத் தொகை அதிகரிப்பு, மடிக்கணினி வசதி உட்பட 9 அம்ச கோரிக்கை போராட்டம் எனவும், இதனைக் கடந்த மூன்று ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாகவும் அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் பேசியுள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாகத் தகுதியான படிப்பு இருந்தும் பல மாற்றுத்திறனாளிகள் வேலை இல்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் ஒரு சில மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர்.