இந்தியாவில் வெளியாகும் படங்களுக்கு மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய திரைப்பட விருதுகள்' வழங்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உட்பட பல்வேறு மொழி படங்களில் சாதித்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 70-வது தேசிய திரைப்பட விருதுகளில் இருந்து இந்திரா காந்தி மற்றும் நர்கீஸ் தத் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் வழங்கப்பட்டிருந்த ‘சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது’ இனி ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது’ எனவும் ‘தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கீஸ் தத் விருது’ இனி ‘தேசிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ எனவும் வழங்கப்பட உள்ளன.
மேலும் அறிமுக இயக்குநர் விருதுக்கான பரிசுத்தொகையை இதற்கு முன்பு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பகிர்ந்துகொண்ட நிலையில், இனி பரிசுத்தொகை இயக்குநருக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகையும் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.