வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் சுற்றுலாவிற்காகச் சென்றிருந்தார்கள். அப்போது, அவர்கள் சென்றிருந்த கார் பிப். 4 அன்று திடீரென மலையிலிருந்து சட்லஜ் நதியில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவரை அம்மாநில காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். ஸ்கூபா டைவிங் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர் என 100-க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்குச் சற்று தொலைவிலிருந்த பாறையின் கீழே உடல் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் வெற்றி துரைசாமியின் இல்லத்தில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரது உடல் இன்று மாலை 5 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த தனது நண்பர் வெற்றி துரைசாமியின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் அஜித்.