தமிழகத்தின் முதல் பழங்குடியின நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 23 வயதான ஸ்ரீபதி.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. பழங்குடியினத்தை சேர்ந்த ஸ்ரீபதி, 23 வயதில் பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் ஸ்ரீபதி. 6 மாத பயிற்சிக்குப் பின்பு இவர் நீதிபதி ஆகிறார். எனவே சிவில் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண் என ஸ்ரீபதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். பிஏ,பிஎல் சட்டப்படிப்பை முடித்திருக்கும் ஸ்ரீபதி, சிவில் நீதிபதி தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்குக் குழந்தை பிறந்தது. தேர்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு குழந்தை பிறந்ததைத் தொடந்து, தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். சாதிக்க எதுவும் தடை இல்லை என்பதை நிருபித்து காட்டியுள்ளார் ஸ்ரீபதி.
இந்த சாதனையை குறித்து பழங்குடி மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றிவரும் ஆசிரியர் மகாலட்சுமி கூறியதாவது:
“பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதி ஸ்ரீபதி. ஜவ்வாதுமலையில் பிறந்து, ஏலகிரி மலையில் கல்வி கற்று பிஏ,பிஎல் சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர். இன்று மலையும், மாவட்டமும், தெரிந்தவர்கள் அனைவரும் ஸ்ரீபதியைப் பாராட்டிப் போற்றிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23), அவருடைய இனமா, அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா? மூன்றுமே எனலாம் நீங்கள். ஸ்ரீபதிக்குத் தேர்வு வரும் தேதியிலேயேதான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு இரண்டுநாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது. தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார். கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வுக்குச் சென்னை செல்கிறார். தேர்வு எழுதினார். இதோ வெற்றிவாகையும் சூடியிருக்கிறார்” என்றார்.