தேசிய விருது பெற்ற இயக்குநரான மணிகண்டனின் வீட்டில் திருடு போனதைத் தொடர்ந்து அவரின் தேசிய விருது பதக்கங்களை மர்ம கும்பல் திருப்பியளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், ‘காக்கா முட்டை, கடைசி விவசாயி’ போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவரின் ‘கடைசி விவசாயி’ படம் தேசிய விருது பெற்றது. இந்நிலையில் கடந்த 8 அன்று மணிகண்டனின் வீட்டில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணம், 5 சவரன் நகை மற்றும் தேசிய விருதுகள் திருடப்பட்டதாக இயக்குநர் மணிகண்டன் புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில் மணிகண்டனின் வீட்டு வாசலில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுகளை மர்ம கும்பல் வைத்துச் சென்றுள்ளனர். மேலும் அந்த கடிதத்தில் ‘அய்யா, எங்களை மன்னித்துவிடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு’ என எழுதி உள்ளனர்.