இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹமதுக்கு இரண்டு நாள் அவசர விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணி, ராஜ்கோட்டில் வருகிற 15 அன்று மூன்றாவது டெஸ்டில் விளையாட உள்ளது. இந்நிலையில் ராஜ்கோட் விமான நிலையத்தில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமதுக்கு தன்னுடைய விசாவால் சிக்கல் ஏற்பட்டது.
இந்தியாவிற்கு வர அவருக்கு ஒற்றை நுழைவு விசா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட்க்கு முன்பு அதிக இடைவேளை இருந்த காரணத்தால் இங்கிலாந்து அணியினர் அபுதாபிக்கு சென்றனர். இந்நிலையில் ரெஹான் அஹமது தன்னிடம் இருந்த ஒற்றை நுழைவு விசாவுடன் அங்கிருந்து திரும்பியிருக்கிறார். எனவே மீண்டும் விமான நிலையத்திற்கு வந்த ரெஹான் அஹமது விசா காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், அச்சமயத்தில் அவரிடம் சரியான ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ராஜ்கோட் விமான நிலையத்தில் இருந்த உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் அவருக்கு இரண்டு நாள் அவசர விசா வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்து அணியினருடன் இணைந்து பயணம் செய்தார். ஏற்கெனவே இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சோயிப் பஷீர், விசா சிக்கல் காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. தாமதமாக இந்தியா வந்தடைந்த அவர் 2-வது டெஸ்டில் விளையாடினார்.