வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் சுற்றுலாவிற்காகச் சென்றிருந்தனர். அப்போது, அவர்கள் சென்றிருந்த கார் பிப். 4 அன்று திடீரென மலையிலிருந்து சட்லஜ் நதியில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவரை அம்மாநில காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும், வெற்றி துரைசாமியின் எடை, உயரம் கொண்ட மாதிரி பொம்மையை ஆற்றில் வீசி உடல் எவ்வாறு சென்றிருக்கும் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். ஸ்கூபா டைவிங் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர் என 100-க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்குச் சற்று தொலைவிலிருந்த பாறையின் கீழே உடல் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது.