இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இருந்து கே.எல். ராகுல் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு கர்நாடக வீரர் தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் வருகிற 15 அன்று தொடங்கவுள்ளது. முதல் இரு டெஸ்டுகள் முடிந்த நிலையில் இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஏற்கெனவே முதல் இரு டெஸ்டுகளைத் தவறவிட்ட கோலி, தனிப்பட்ட காரணங்களுக்காக அடுத்த மூன்று டெஸ்டுகளில் இருந்தும் விலகியுள்ளார். மேலும் முதுகுத் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ரேயஸ் ஐயரும் அணியில் இடம்பெறவில்லை. இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு மற்றொரு பின்னடைவாக கே.எல் ராகுலும் காயத்தால் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 23 வயது தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
படிக்கல் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 151 மற்றும் 36 ரன்களை குவித்து ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் 6 இன்னிங்ஸில் மூன்று சதங்களுடன் 556 ரன்கள் குவித்துள்ளார் படிக்கல். ரஞ்சி கோப்பைக்கு முன்பு, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் இடம்பெற்று 65, 21 & 105 ரன்கள் எடுத்தார்.