சென்னையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து அறிவிப்போம்” என பேசினார்.
பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: “கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது. நாங்கள் சொல்லும் கருத்துக்கு மாற்றுக் கருத்தாகவே அனைவரும் பதிவு செய்கிறார்கள். 2014 -ல் நடந்தது போல நம் கட்சிக்கு சீட்டை வழங்கி, மரியாதையுடன் அழைத்தால் கூட்டணி அமைக்கலாம் என்பது மாவட்ட செயலாளர்களின் கருத்தே. இது தலைமையின் கருத்தோ, என்னுடைய கருத்தோ இல்லை. ஆனால், 14 + 1 சீட் கொடுத்தால் தான் நான் கூட்டணி அமைப்பேன் என்று சொன்னதாக அனைவரும் கூறுகிறார்கள். எனவே, மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து அறிவிப்போம். அதுவே இறுதியான முடிவு. யாருடன் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதனை வெளிப்படையாக அறிவிப்போம். தேர்தலுக்கான அதிகாரபூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் எந்த கட்சியினருடனும் நடக்கவில்லை” என்றார்.