வடக்கு தெற்கு என்று சொல்லும் பிரிவினைவாதிகளின் கடைசி தேர்தலாக 2024 இருக்கவேண்டும் என அண்ணாமலை பேசியுள்ளார்.
காட்டாங்குளத்தூர் பாஜக தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
“பொதுவாக அனைவரும் ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தோம் என்பதைச் சொல்லித் தான் ஆட்சியை நடத்துவார்கள். 32 மாதங்களில் சாதனைகளாகக் கூற திமுகவிடம் ஒன்றும் இல்லை. வடக்கு தெற்கு என்று சொல்லும் பிரிவினைவாதிகளின் கடைசி தேர்தலாக 2024 இருக்கவேண்டும். 2004-ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். அவர் முதல்வராக இருந்தபோது பல இடங்களில் ‘மத்திய அரசு நிதிப் பகிர்வினை சரியாக பண்ணுவது கிடையாது, மாநில அரசுக்கு நிதி கொடுப்பது கிடையாது’ எனப் பேசினார். அப்போதைய சமயத்தில் நிதிப் பகிர்வு 30.5 சதவீதம் இருந்தது. 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் அதனை 32 சதவீதமாக உயர்த்தியது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 32 சதவீதமாக இருந்த நிதிப் பகிர்வை 42 சதவீதமாக உயர்த்தியது. எனவே தமிழகத்திற்கு நிதிப் பகிர்வு குறைவு என்று திமுக விமர்சிப்பது பொய்” என்றார்.