காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடலை தொடர்ந்து 7-வது நாளாகத் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஹிமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் சுற்றுலாவிற்காகச் சென்றிருந்தார்கள். அப்போது, அவர்கள் சென்றிருந்த கார் பிப்ரவரி 4 அன்று தீடீரென மலையில் இருந்து சட்லஜ் நதியில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் வெற்றி துரைசாமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவரை அம்மாநில காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
மேலும், கார் விபத்தில் காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி தருவதாகச் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 7-வது நாளாகத் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. வெற்றி துரைசாமியின் எடை, உயரம் கொண்ட மாதிரி பொம்மையை ஆற்றில் வீசி உடல் எவ்வாறு சென்றிருக்கும் என்பதைக் கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்கூபா டைவிங் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர் என 100-க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆற்றங்கரையோரம் கண்டறியப்பட்ட மூளை திசுக்கள் குறித்த டிஎன்ஏ பரிசோதனை முடிவு நாளை வெளியாகும் என தெரிகிறது.