பிரபல பின்னணி பாடகரான ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, ரம்பா, நடிகர் யோகி பாபு, மிர்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரசிகர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. விஐபி-களுக்காக சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற இடங்களை இலவசமாக பார்வையாளர்களுக்கு அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இலவச இடத்தில் அதிகளவில் பார்வையாளர்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அந்த கூட்டத்தை காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, காயமடைந்ததாகவும் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.