நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சிக்கு, தமிழக வெற்றி கழகம் எனப் பெயரிடப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்திருந்தார். மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அதில் கிடைக்கும் வெற்றியால் மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளிடம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசி உள்ளார். அவர் கூறியதாவது:
“ஒரு கட்சி தொடங்கினால் அதன் பெயர் வெளியே தெரிய குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் பெயர், தொடங்கிய சில மணி நேரத்தில் உலகம் முழுக்க சென்றடைந்தது. தலைவர் என்ற பதவி விஜய்க்கு மட்டுமே. உலகமே தேடும் 10 நபர்களில் ஒருவர் விஜய். 2026 உண்மையாக வேண்டும். அது உங்கள் கைகளில் இருக்கிறது. அனைத்தையும் விட்டுவிட்டு நமக்காக வரும் ஒரே தலைவர் நம் விஜய் மட்டும் தான் என்பதை இந்த இடத்தில் நான் கூறுகிறேன். அவர் நிற்கிறார், இவர் நிற்கிறார் என்று பார்க்கக்கூடாது. அனைத்து தொகுதிகளிலும் விஜய் நிற்கப்போகிறார் என எண்ணி உழைக்கவேண்டும். மக்களுக்காக எப்போதும் நிற்பார் விஜய். அடுத்த இரண்டு வருடம் உழைத்தால் மட்டுமே நாம் வெல்ல முடியும், எனவே இப்போது இருந்தே மக்களின் கஷ்டங்களை நாம் கேட்டறிந்து அதனை சரிசெய்ய வேண்டும்” என்றார்.