மோடி பிரதமர் ஆனதும் மாநிலங்களின் உரிமையைப் பறித்தார்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றித் தருவேன் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, கலைஞரிடம் சொன்னார்...
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்ANI

மாநிலங்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதியைச் சரிவர ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து தில்லி, ஐந்தர்மந்தரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின், காணொளி வாயிலாக உரையாற்றினார். இந்தப் போராட்டத்தில் திமுக கட்சியின் சார்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

இந்தப் போராட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாவது:

“இந்த போராட்டத்தில் பங்கெடுக்க சகாவு பினராயி விஜயன் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு, நேற்றுதான் தாயகம் திரும்பினேன். அதன் காரணமாக, என்னால் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க முடியவில்லை. எங்களுடைய கட்சியின் சார்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பிக்களை அனுப்பினேன்.

கேரளத்தில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை தில்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுறேன். நிதிப்பகிர்வில் தங்களின் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக எல்லா மாநிலங்களும் போராட்டம் நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான ஒன்றிய பாஜக அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞரிடம் ஒரு கருத்தை சொன்னார்.

"தமிழ்நாட்டின் கோரிக்கைக்காக நீங்கள் ஒரு முறை கூட தில்லிக்கு வரத் தேவையில்லை. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க மாட்டேன், தமிழ்நாட்டில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றித் தருவேன்" என்று சொன்னார். மாநிலங்களை மதிக்கிற, மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தார்கள். ஆனால், பிரதமர் மோடி, மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார். மாநிலங்கள் இருப்பதோ, மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதோ அவருக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர் அவர்.

ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையைப் பறித்ததுதான். நிதி உரிமையை பறித்தார்; கல்வி உரிமையைப் பறித்தார்; மொழி உரிமையைப் பறித்தார்; சட்ட உரிமையைப் பறித்தார்.

மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜக முதலமைச்சர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாவே சொல்ல விரும்புகிறேன். பாஜக அரசின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியோடு போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதலமைச்சர் காம்ரேட் பினராயி விஜயனும் போராடி வருகிறார். ஜி.எஸ்.டி வரி விதிப்புக்குப் பிறகு மாபெரும் நிதி நெருக்கடிப் பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம்.

மாநில அரசிடம் தான் எல்லா அன்றாடத் தேவைகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் நம்முடைய ஒற்றுமையின் மூலமாக, இந்திய அரசைக் கைப்பற்றி, பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in