திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 நாள் ஸ்பெயின் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ஸ்பெயினில் ரூ.3440 கோடி அளவுக்கான முதலீட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது” எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையில் பேசியதாவது:
“திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் கிடைத்த முதலீடுகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இருபது நாட்களுக்கு முன்பு, சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே? ஆனால், 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதலமைச்சர் ஸ்பெயினுக்குச் சுற்றுப்பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது முதலீட்டை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என்ற சந்தேகம் மக்களுக்கும் எழுந்து உள்ளது. அதனை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்” என்றார்.