வெடிகுண்டு மிரட்டல் : சென்னையில் சில பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தகவல் புரளி தான் என்றும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
சென்னையில் அண்ணா நகர், கோபாலபுரம், பாரிமுனை, ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மர்ம நபர்களால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் இந்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்களை அவர்களுடைய பெற்றோர் உடனடியாக அழைத்துச் செல்லவேண்டும் எனப் பள்ளிகள் அறிவிப்பை வெளியிட்டன. இதனால் பெற்றோர்கள் உடனடியாகப் பள்ளிகளுக்கு விரைந்தார்கள். இதனால் பெற்றோர்களிடையே பதற்றமும் பீதியும் நிலவியது. சில பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை மட்டும் வெளியேற்ற அனுமதித்தார்கள். இதனால் பெற்றோர், பள்ளி நிர்வாகம் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.
மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள். இதன்முடிவில் மின்னஞ்சல் மிரட்டல் ஒரு புரளி தான் என்றும் இதனால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.