கேரள அரசுக்கு முழு ஒத்துழைப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

நாளை மறுநாள் (பிப்ரவரி 8) தில்லியில் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.மு.க.வும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்ANI

மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு விஷயத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், மத்திய அரசைக் கண்டித்து தென்னிந்திய மாநில அரசுகளை ஒருங்கிணைத்து தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. வரும் 7-ம் தேதி மத்திய அரசைக் கண்டித்து கர்நாடகம் சார்பில் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதற்கு அடுத்த நாள் திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் கருப்புச் சட்டை அணியும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் கேரள அரசு சார்பில் தில்லியில் ஆர்ப்பாட்டமும் நடைபெறவிருக்கிறது. மாநில உரிமைகளுக்கான போராட்டம் என்பதால் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தென்னிந்திய எம்.பி.க்களும், கட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போராட்டங்கள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தோழர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழில் துறை அமைச்சர் ராஜீவ் என்னிடம் அளித்திருந்தார்.

அதற்கான பதில் கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என்று உறுதியளித்திருக்கிறேன்.

மேலும், நாளை மறுநாள் (பிப்ரவரி 8) தலைநகர் தில்லியில் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.மு.க.வும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெற்கில் நாம், தோழர் பினராயி விஜயன், கிழக்கில் மரியாதைக்குரிய சகோதரி மமதா பானர்ஜி என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியான பற்றுதலைக் கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களுடைய குரல்கள்தான் வேறே தவிர; கொள்கை ஒன்றுதான்!

கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது!

உயிர்த்தீயாய்ச் சுடர்விடும் மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது. நிதி, நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மாநிலங்களுடைய உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும். அதற்கான காலம் கனிந்துகொண்டு இருக்கிறது" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in