கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமைக் காவலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 27 அன்று மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவர் தான் இந்த செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதன்பிறகு சபரிகிரியைக் காவல்துறை கைது செய்தது. மேலும் விசாரித்ததில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சபரிகிரி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் செட்டிபாளையத்தில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சபரிகிரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சபரிகிரியைப் பணியிடை நீக்கம் செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.