டிச.30 2022 அன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் முழு உடற்தகுதியைப் பெற்றுள்ள ரிஷப் பந்த் அந்த விபத்தைப் பற்றி பேசியுள்ளார்.
2022 இறுதியில் சாலையில் நடந்த கார் விபத்தில், ரிஷப் பந்த் மிக மோசமாகக் காயமடைந்தார். இதைத்தொடர்ந்து 2023-ல் அவர் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. கடைசியாக 2022 இறுதியில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடினார் ரிஷப் பந்த். இந்நிலையில் 2024 ஐபிஎல் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் தீவிரமாக விளையாட ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. எனினும் அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவாரா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. ஐபிஎல் 2024 போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் மீண்டும் செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து ரிஷப் பந்த் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியதாவது:
“வாழ்க்கையில் அப்படி ஒரு உணர்வு முதல் முறையாக வந்தது. விபத்தின் போது, காயங்கள் பற்றி நான் அறிந்திருந்தேன், ஆனால் அதிர்ஷ்டவசமாக அது தீவிரமடையவில்லை. காயத்திலிருந்து மீள, நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்ததையே செய்ய வேண்டும். அது சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கும், ஆனால் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கும் வரை, எதிர்காலத்தைக் குறித்து அதிகம் திட்டமிட விரும்பவில்லை. நான் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என தெளிவுபடுத்தும்படி கேட்டேன். அதற்கு 16 முதல் 18 மாதங்கள் ஆகும் என்றார். நீங்கள் கூறும் காலத்திலிருந்து ஆறு மாதத்தைக் குறைத்துவிடுவேன் என்று சொன்னேன்” என்றார்.