ஜன.19 அன்று தொடங்கிய கேலோ இந்தியா போட்டிகள் இன்று (ஜன.31) நிறைவுபெற்றன. முதல்முறையாகப் பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜன.19 அன்று தொடக்கி வைத்தார். இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவுபெற்றன.
38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது தமிழ்நாடு. கடந்த முறை 8-வது இடத்தைப் பிடித்த தமிழ்நாடு இம்முறை 2-வது இடத்தைப் பிடித்தது. மஹாராஷ்ட்ர மாநிலம் முதலிடத்தைப் பிடித்தது.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். எம்.பி. தயாநிதி மாறன், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஆர்த்தி கஸ்தூரி ராஜ் உள்ளிட்டோரும் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்கள்.